தமிழகத்தில் கடந்த ஆண்டு (2025) கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2025-ல் தமிழகத்தில் மொத்தம் 1,00,097 புதிய கேன்சர் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் அடங்குவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2020-ல் 68,750 பேரும், 2021-ல் 76,968 பேரும், 2022-ல் 89,265 பேரும், 2023-ல் 92,816 பேரும், 2024-ல் 96,486 பேரும் பாதிக்கப்பட்டனர். இப்போது 2025-ல் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது மக்களின் வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பை தெளிவாகக் காட்டுகிறது.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, சென்னை முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் 8,505 பேர் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 7,295 பேரும், வேலூரில் 6,525 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு மாசு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி குறைவு ஆகியவை முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இதையும் படிங்க: விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரிய வழக்கு…! வாதாட வைகோ ஆஜர்..!
ஆண்களில் வாய் கேன்சர் அதிகம் காணப்படுகிறது. புகையிலை, புகைப்பழக்கம் இதற்கு முதன்மை காரணமாக உள்ளது. அதைத் தொடர்ந்து பெருங்குடல், வயிற்று கேன்சர் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன.

பெண்களில் மார்பக கேன்சரும், கருப்பை வாய் கேன்சரும் முன்னணியில் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்படுவதால், சிகிச்சை வெற்றி விகிதம் குறைவதோடு, செலவுகளும் அதிகரிக்கின்றன.
இந்நிலையில், நம்பிக்கை அளிக்கும் ஒரு முன்னெடுப்பு வந்துள்ளது. சென்னை ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கழகம்) இந்தியாவில் முதல் முறையாக கேன்சர் மரபணு தரவுத் தளத்தை வெளியிட்டுள்ளது. ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி இதை வெளியிட்டார்.
இது குழந்தைகளின் லுகேமியா, கொலோரெக்டல் மற்றும் பான்கிரியாடிக் கேன்சர்களின் மரபணு தரவுகளை உள்ளடக்கியது. இந்தியர்களுக்கு ஏற்ற மரபணு தகவல்கள் குறைவாக இருந்த நிலையில், இந்த தளம் மருத்துவ ஆராய்ச்சி, சிகிச்சை முறைகளை மாற்றும் வகையில் பெரும் உதவியாக இருக்கும் என காமகோடி தெரிவித்தார்.
கேன்சர் உயிர்கொல்லி நோயாகத் தொடர்கிறது. உலக அளவில் தடுப்பூசி உள்ளிட்ட ஆய்வுகள் நடந்தாலும், எல்லா வகை கேன்சர்களுக்கும் பொருந்தாது. எனவே, விழிப்புணர்வு, தொடர் பரிசோதனை, ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் ஆகியவை மிக முக்கியம். தமிழக அரசும் மத்திய அரசும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய நேரம் இது. மக்களும் உணவு, உடற்பயிற்சி, புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!! மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!