தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் சிலிப்) வழங்கும் பணி இன்று (ஏப்ரல் 12) முதல் முழு வேகத்தில் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று இந்த சீட்டுகளை விநியோகம் செய்யத் துவங்கியுள்ளனர்.
வாக்குப் பதிவு சதவீதத்தை உயர்த்தும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை வாக்காளர் தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட பெரிதாக அச்சிடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் க்யூஆர் குறியீடும் (QR Code) இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் தொடரும்! பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து பாக்., அறிவிப்பு!
தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களுக்கும் வரும் 17ஆம் தேதிக்குள் பூத் சிலிப்பை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்குப் பதிவுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே இந்தப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்ளிட்ட 12 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி எண், வாக்காளர் வரிசை எண், பெயர், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை விவரங்களும் தெளிவாக இடம்பெற்றிருக்கும். இந்த சீட்டை வீட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டு, வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு எளிதாகச் செல்லலாம்.
தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி வாக்களிக்கும் முன், பூத் சிலிப்பைப் பெற்றுக்கொள்ள வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும். சிலிப்பு கிடைக்காதவர்கள் உடனடியாக தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலரைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த முறை பூத் சிலிப் விநியோகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், வாக்காளர்களுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்களது சீட்டை உடனடியாகப் பெற்று, தேர்தல் நாளில் தங்களது ஜனநாயகக் கடமையைச் செவ்வனே செய்யுமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதையும் படிங்க: சேலை நெய்வது எப்படி?! நெசவாளர் வீட்டில் முதல்வர்! நெசவு செய்து வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!!