தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மாணவர்கள் தங்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூலை 15 முதல் 18 வரை நடைபெற்றது. இந்தப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், இறுதியாக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 258 பேருக்கும், விளையாட்டுப் பிரிவில் 416 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் பிரிவில் 139 பேருக்கும் என மொத்தம் 813 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் சுற்று ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பொது தரவரிசையில் 1 முதல் 37,976 வரை இடம்பெற்றுள்ள மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கட்டத்தில் விருப்பக் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்... முதல் சுற்று மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... ஜூலை 15-ல் ரிசல்ட்!

இரண்டாவது சுற்று ஆகஸ்ட் 3 முதல் 17 வரை நடைபெறுகிறது. இதில், 37,977 முதல் 1,31,093 வரை தரவரிசை பெற்ற மாணவர்கள் பங்கேற்பார்கள். மூன்றாவது மற்றும் இறுதி சுற்று ஆகஸ்ட் 17 முதல் 31 வரை நடைபெறவுள்ளது. இதில் 1,31,094 முதல் 2,33,812 வரை தரவரிசையில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அதேபோல், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கும் இதே கால அட்டவணைப்படி மூன்று சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியை உறுதி செய்வது, தங்களது விருப்பங்களை மாற்றுவது அல்லது அடுத்த சுற்றுக்கு காத்திருப்பது போன்ற தேர்வுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும், ஏதேனும் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருந்தால், அவற்றை நிரப்ப துணைக் கலந்தாய்வு நடத்தப்படும். எனவே, மாணவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்... முதல் சுற்று மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... ஜூலை 15-ல் ரிசல்ட்!