பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கோலாகலமாக கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. தீபாவளி அன்று புத்தாடைகள், இனிப்புகளுடன் பட்டாசு வெடிப்பது மிக முக்கியமான நிகழ்வாகும். ஆனால் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுவைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தீபாவளித் திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.
இதையும் படிங்க: அலற வைக்கும் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணம்... பயணிகள் அதிர்ச்சி...!
மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தித்திக்கும் தீபாவளி..!! கலிபோர்னியாவில் அரசு விடுமுறையாக அறிவிப்பு: வரலாற்று மைல்கல்..!!