காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் சட்டப்படி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கைப் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்றும், மேகதாது அணைத் திட்டத்தால் தமிழகத்தின் நதிநீர் உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதில் கர்நாடகா உறுதியாக உள்ளது என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்களைச் சட்ட ரீதியாகவும் சுமூகமாகவும் அணுக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். காவிரி விவகாரம் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட விதிகளால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழலில், எந்தவொரு மாநிலமும் இதில் தன்னிச்சையாக முடிவெடுத்துவிட முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி காவிரி நீரில் தமிழகத்துக்குச் சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை முறையாகப் பெறுவதற்கு முழு உரிமையும் நியாயமும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அணைகளில் இருந்து உபரியாகத் திறக்கப்படும் நீர் குறித்துப் பேசிய அவர், மழைக்காலங்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் பெருமளவிலான உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்த்து, அது தமிழக மக்களின் விவசாய மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்பட வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கம். மேகதாதுவில் சமநிலை நீர்த்தேக்கம் அமைப்பதால் தமிழகத்திற்குச் செல்லும் உரிய நதிநீரின் அளவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்": இபிஎஸ்-க்கு நத்தம் விஸ்வநாதன், வேலுமணி கடிதம்!
இரு மாநில விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், எவ்வித முரண்பாடுகளும் இன்றி மாநிலங்களுக்கு இடையேயான ஆக்கபூர்வமான மற்றும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு காணக் கர்நாடக அரசு தொடர்ந்து முழு முயற்சி எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!