தமிழக அரசியல் சூழலில் த.வெ.க. அரசு மற்றும் பா.ம.க. இடையிலான நெருக்கம் குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) அரசுக்கு தொடர்ந்து வழங்கும் விமர்சனங்களே, இந்த அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தற்போதைய அரசியல் அமைப்பில், தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் த.வெ.க. அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருகின்றன. இதில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் அரசுடன் இணக்கமான அணுகுமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க. சில நிர்வாக மற்றும் கொள்கை விவகாரங்களில் நேரடியாக விமர்சனம் செய்து வருவது அரசுக்கு சவாலாக மாறியுள்ளது.
குறிப்பாக நிர்வாக மாற்றங்கள், அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் வி.சி.க. தலையீடு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதேபோல், அரசின் வருவாய் கொள்கை மற்றும் சமூக நலத் திட்டங்கள் தொடர்பாகவும் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றன. இது ஆட்சிக்கு அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

இந்த சூழலில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் த.வெ.க.வில் இணைந்ததும் அரசியல் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனை கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க. கட்சிகள் “குதிரை பேரம்” என விமர்சித்துள்ளன. இதனால் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் மேலும் வெளிப்படையாகி வருகின்றன.
இதற்கிடையில், வி.சி.க. தலைவர் திருமாவளவன் அமைச்சரவையில் இருந்து வெளியேறலாம் என்ற கருத்தை தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், அரசு வருவாய் திரட்டல் மற்றும் நிர்வாக கொள்கைகள் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், நான்கு எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள பா.ம.க.வை அரசு முக்கிய கூட்டாளியாகக் கருதத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் உடன் முதலமைச்சர் விஜய் சமீபத்தில் நடத்திய சந்திப்புகள் மற்றும் சமூக நீதி சர்வே தொடர்பான அரசின் அறிவிப்புகள் இதனை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பா.ம.க.வுடன் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கம், தற்போதைய அரசியல் சமநிலையை மாற்றக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. கூட்டணி அரசியலில் உருவாகும் இந்த புதிய நகர்வுகள் தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக பெண் நிர்வாகியுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர்!! முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவில் சர்ச்சை!