திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் சர்ச்சையுடன் தொடர்புடையது. இது 2025-ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா சமயத்தில் தீவிரமடைந்து, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறியது. இவ்விவகாரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. ராம ரவிக்குமார் உள்ளிட்ட மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இத்தூண் தர்காவுக்கு அருகில் இருப்பதால், சில சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், நீதிபதி டிசம்பர் 1, 2025 அன்று தீர்ப்பளித்து, கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இருப்பினும், கார்த்திகை தீபம் நாளான டிசம்பர் 4, 2025 அன்று கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக, உச்சி பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் சட்டம் ஒழுங்கு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இதனால், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாதவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகள் அடிப்படையில் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் இரவோடு இரவாக பிறைக்கொடி அகற்றம்! தர்கா தரப்பினர் போலீசில் புகார்!
ஆட்சியர் பிரவீண் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று ஆஜர் ஆகினர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்பதோ, மதிக்கக் கூடாது என்பதோ எனது நோக்கமல்ல என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: H. ராஜா அதிரடி கைது..! இதுதான் காரணம்... அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி..!