திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் விலங்குகள் பலியிடுவதற்கும், ஆண்டு முழுவதும் தொழுகை நடத்துவதற்கும் தடை விதிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்மூலம், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டுமே நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும், விலங்குகளை பலியிடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரதானமாக அமைந்துள்ளது. இதே மலையில் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இந்த இடம் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் உள்ள புராதன சின்னமாகும். இங்கு ஆடு, கோழி போன்றவற்றை பலியிடுவது, அசைவ உணவு சமைப்பது, கொண்டு செல்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கல்லத்தி மரம் தர்காவுக்கு சொந்தமா? திருப்பரங்குன்றத்தில் H. ராஜா தடுத்து நிறுத்தம்… போலீசாருடன் கடும் வாக்குவாதம்..!
இந்திய அரசின் புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்கள் சட்ட விதிகளை மீறுவதாக நீதிமன்றம் கருதியது. இந்த விவகாரத்தில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். மலையை 'சிக்கந்தர் மலை' என அழைக்கக் கூடாது, விலங்கு பலி தடை செய்ய வேண்டும், நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகைக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்த மனுக்களை ஒன்றாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி முக்கிய தீர்ப்பு வழங்கியது. இரு நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட கருத்துகள் எழுந்த நிலையில், மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து இறுதி தீர்ப்பு அளித்தார். தர்காவில் விலங்கு பலி நடைமுறை பண்டைய மரபாக இல்லை என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், இது தொல்பொருள் சட்டத்தை மீறுவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மலையின் பெயர் 'திருப்பரங்குன்றம் மலை' என்றே தொடர வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தர்கா தரப்பில் இமாம் ஹுசைன் மேல் முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இம்மனுவை விசாரித்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றம் அளித்த சமநிலையான தீர்ப்பு மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டது என்றும் நீதிமன்றம் கருதியது.

இதன்படி, சிக்கந்தர் தர்காவில் ஆண்டுக்கு இருமுறை – ரம்ஜான் மற்றும் பக்ரீத் – மட்டுமே நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி உண்டு. விலங்கு பலி, அசைவ உணவு தொடர்பான எந்த நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது. இத்தீர்ப்பு மலைப்பகுதியின் புனிதத்தன்மையையும், சட்ட விதிகளையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. இது இரு சமூகங்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதையும் படிங்க: பற்றி எரியும் தி.குன்றம் விவகாரம்..!! திமுகவின் திட்டமிட்ட அரசியல் மோதலா..?? கிளம்பும் எதிர்ப்புகள்..!!