சென்னை மணலி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து மைசூரு நோக்கி எரிபொருள் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருவள்ளூர் ஏகாட்டூர் அருகே வந்தபோது, திடீரென தீ பிடித்து எரிந்தது. சரக்கு ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் ஏகாட்டூரைச் சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கரும்புகையின் பாதிப்பு உணரப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கடுமையான மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் தேசிய மீட்பு படையினர், ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். டீசல் டேங்கர் ரயிலில் அதிகாலை பற்றிய தீ, சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமானது. டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7 மணி நேர போராட்டம்.. அணைக்கப்பட்ட தீ..!! இத்தனை கோடி மதிப்பிலான டீசல் நாசமா..!!
இதனிடையே இந்த தீ விபத்தைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. அதேபோல் சென்னை சென்ட்ரலுக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட இருந்த ரயில்கள், சில அரக்கோணத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை, திருவனந்தபுரம் மற்றும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதில், அரக்கோணத்திலிருந்து புறப்படும். சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் (இரவு 10 மணி) சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (இரவு 7.30) சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் காவேரி எக்ஸ்பிரஸ் (இரவு 9.15) ஆகிய ரயில்கள் சென்ட்ரலுக்கு பதில் அரக்கோணத்திலிருந்து புறப்படும்.
சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் செல்ல 1 மணி நேரம் ஆகும். அதேபோல் புறநகர் மின்சார ரயிலில் செல்ல வேண்டும் என்றால் 2 மணி நேரம் வரை ஆகும். இதனால் வார இறுதி நாளான இன்று பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி..! பற்றி எரியும் ரயில்.. சூழ்ந்த கரும்புகை.. நடந்தது என்ன..?