தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கிய தீர்மானம், மாநிலத்தின் பண்பாட்டு அடையாளத்தையும் மாநில உரிமைகளையும் வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும்” என்று கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ‘மனோன்மணீயம்’ நாடக நூலிலிருந்து எடுக்கப்பட்ட பாடல். 1891ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப் பாடல், 1970 நவம்பர் 23ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அரசாணை மூலம் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பின்னர் 2021 டிசம்பர் 17ஆம் தேதி அன்றைய திமுக அரசு இதை மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சி தொடங்கும் முன் இதைப் பாடுவது கட்டாயமாக்கப்பட்டது.
இதையும் படிங்க: செல்போனை பார்த்து படித்த அமைச்சர்.. பொறுமையிழந்த ஜேசிடி பிரபாகர்! அவையிலேயே கண்டிப்பு!!
இந்தப் பாரம்பரியம் சமீப காலங்களில் சவால்களை எதிர்கொண்டது. 2026 மே 10ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையைக் காரணம் காட்டி வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இடம்பெற்றது. இது பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. ஆளுநர் பங்கேற்ற சில நிகழ்ச்சிகளிலும் இதே வரிசை பின்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. இந்தப் பின்னணியில், முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!