பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை எவ்விதச் சமரசமும் இன்றிச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் இடும்பையன் மறைவையொட்டி அவரது படத்திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று, அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு. வீரபாண்டியன், கட்சியின் கொள்கை முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய மு. வீரபாண்டியன், "பாலியல் குற்றங்களைத் தடுக்கக் காவல்துறை முழுமையாக முடுக்கிவிடப்பட வேண்டும்; இதில் எந்தச் சமரசமும் கூடாது என்றுதான் தமிழக முதலமைச்சரும் அறிவித்துள்ளார். இந்த அநீதிகளுக்கு எதிராகத் தமிழ் சமூகத்தின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைத்து பேதங்களையும் கடந்து களமிறங்க வேண்டும். கல்வி நிறுவனங்களும், அரசியல் இயக்கங்களும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், 'சிங்கப்பெண்' திட்டத்தில் போலீஸார் பற்றாக்குறை இருக்குமேயானால், மாவட்ட நிர்வாகம் அதுகுறித்து ஆலோசித்து அறிக்கை தர வேண்டும்; தேவையெனில் கூடுதலாகக் காவலர்களை நியமிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது..!! கறார் காட்டும் மத்திய அரசு..!!
சமீபகால அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், "நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு நல்ல நடிகர். ஆனால், அவர் அரசியலுக்கு வரும்போது மிகுந்த நிதானத்தோடு பேசிப் பழக வேண்டும். அரசியலில் நேர் எதிர் கருத்துகளும், ஒரு கட்சி வெற்றியடைவதும், இன்னொரு கட்சி தோல்வியடைவதும் இயல்பான ஒன்றுதான். கருத்துகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதலாமே தவிர, கண்ணியக் குறைவான கருத்துகளைப் பதியச் செய்யக்கூடாது" என்று குறிப்பிட்டார். மேலும், "சபாநாயகர் என்பவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதி அல்ல; அவர் சட்டமன்ற விதிகளை, நடைமுறைகளை மீறக் கூடாது. இந்தியாவைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் சுற்றி வளைத்துவிட்டன; தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகளை அரசு அனுமதிக்கக் கூடாது" என்றும் அவர் வலியுறுத்தினார்.

காவிரி விவகாரம் குறித்துப் பேசிய வீரபாண்டியன், "காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில், முந்தைய அரசின் நிலைப்பாடே தொடரும் எனத் தற்போதைய முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது; இந்த முடிவில் அவர் உறுதியாக இருக்க வேண்டும். மேகதாது அணை கட்டப்படக் கூடாது. இதனை வெறும் அணை, நீர் என்று மட்டும் பார்க்காமல், இரண்டு மாநிலங்களின் உறவு மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்" என்று விவரித்தார்.
விவசாயிகளின் நலன்கள் மற்றும் மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறித்துப் பேசிய அவர், "விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது; அதனை நிறைவேற்ற இந்த அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு இதற்கு உதவ வேண்டும். குறிப்பாக, புதிய தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள அனைத்து நிதிகளையும் உடனடியாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூன் 29-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன" என்று கூறி முடித்தார்.
இதையும் படிங்க: எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்கு தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!