திருநங்கைகளின் கல்வி முன்னேற்றம், குறிப்பாக தமிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்து வருகிறது. திருநங்கைகளின் கல்வி மற்றும் சமூக உயர்வுக்காக தமிழக அரசு பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

குறிப்பாக திருநங்கைகளுக்கு இலவச உயர் கல்வி வழங்குவதற்காக 2017-ல் திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் திட்டங்களை அறிவித்தது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி கல்விக்கு உதவித்தொகைகள், மாணவர் விடுதி வசதிகள் ஆகியவை அடங்கும். திருநங்கைகள் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற உயர்கல்வி படிப்புகளை பயில இந்த உதவித்தொகைகள் உதவுகின்றன.
இதையும் படிங்க: ஆன்மீகப் புரட்சி செய்த ஆளும் அரசு.. முதல்வரை பாராட்டி தள்ளிய செல்வப்பெருந்தகை..!
2021-ல், தமிழ்நாடு அரசு திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1% இட ஒதுக்கீட்டை அறிவித்தது, இது அவர்களின் கல்வி அணுகலை மேம்படுத்தியுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களில் திருநங்கைகளுக்கு ஆதரவான சூழலை உருவாக்க, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகள் திருநங்கைகளுக்கு பிரத்யேக ஆலோசனை மையங்களை அமைத்துள்ளன.

அரசின் இத்தனை முயற்சியால், தமிழ்நாட்டில் திருநங்கைகள் மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் கலைத்துறைகளில் உயர் கல்வி பயின்று வருவதோடு, பலர் சாதனையும் புரிந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை ஜென்சி, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்று, சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் உதவி பேராசிரியராக (Assistant Professor) நியமிக்கப்பட்டுள்ளார். இது திருநங்கைகளின் கல்வி மற்றும் தொழில் வெற்றிக்கு முக்கியமான மைல்கல் ஆகும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜென்சியின் இந்த சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வாழ்த்துகள் Dr. ஜென்சி!
உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்!
தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வரின் வாழ்த்து குறித்து பேசிய டாக்டர் ஜென்சி," 'டாக்டர் ஜென்சி' என என்னை குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரியில் எனக்கு பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும்" என்றார்.
ஜென்சியின் பயணம் பலருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதோடு, இன்னும் இருட்டில் உள்ளவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!