விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கும், பள்ளிப் படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகர் ஊராட்சி - நகராட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் இடைநிற்றல் ஆன 5 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார். இக்கள ஆய்வில் 5 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்லாத காரணங்களை கேட்டறிந்தார். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'தூய்மை மிஷன்': அரசுக்கு எவ்ளோ பொறுப்போ.. மக்களுக்கும் அதே பொறுப்பு இருக்கு - முதல்வர் ஸ்டாலின்..!

அதோடு, புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கி அவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வீடியோவை குறிப்பிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
வாழ்த்துகள் @VNRCollector💐
கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாண்புமிகு @Anbil_Mahesh, @tnschoolsedu அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.
காலை உணவுத் திட்டம், #SmartClassrooms, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாழ்த்து செய்தியை குறிப்பிட்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
இந்தியாவிற்கே முன்மாதிரி அரசாக செயலாற்றும் #திராவிடமாடல் அரசின் சாதனைகளை, வெற்றிகளை மாணவர்களுக்கும் - துறை அலுவலர்களுக்கும் உரித்தாக்கும் தங்களின் மேலான வழிகாட்டுதலில் ‘இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு” எனும் நிலையை நிச்சயம் தொடரச் செய்வோம்.
தாங்கள் வகுத்தளித்த கல்வித் திட்டங்களின் துணை கொண்டு ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING விவசாயிகளுக்கு குட் நியூஸ் : நெல் கொள்முதல் விலை அதிரடி உயர்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!