தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் இன்று சென்னையில் ஒரு துணிகரமானப் போராட்டத்தை முன்னெடுத்தனர். சென்னை மாநகரின் மையப்பகுதியில் ஓடும் கூவம் ஆற்றில் இறங்கி, சாக்கடை நீரிலேயே நின்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்த இந்தச் செயல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே இவர்களின் பிரதான முழக்கமாக இருந்தது.

கால் நூற்றாண்டிற்கும் மேலாக (25 ஆண்டுகள்) மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் மட்டுமன்றி, ஊதிய உயர்வு மற்றும் இதரச் சலுகைகள் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வினோதப் போராட்டம் நடத்தப்பட்டது. தங்களது கோரிக்கைகள் பலமுறை அரசுக்கு முன்வைக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சாக்கடை நீர் ஓடும் கூவம் ஆற்றில் இறங்கி நின்று தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மின்வாரியம் மற்றும் அரசு, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்த தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காகவே இந்த ஆட்சி! அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேச உரை!
சென்னையின் முக்கியப் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டதுடன், காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உயிரைப் பணையம் வைத்து மின்சாரத் துறையில் பணியாற்றும் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கை, தற்போது அரசின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
இதையும் படிங்க: ஆகம விதிகளை மீறக்கூடாது....! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!