மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் விலக்கு என்று பரவும் தகவல் தவறானது என தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது.தமிழை தாய் மொழியாக கொண்டிராத, 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் உண்மை நிலவரத்தை விளக்கியுள்ள தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் பழைய செய்தி என்று குறிப்பிட்டுள்ளது. மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2023-ம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்து இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளின் கோரிக்கையால் 2023-24 கல்வியாண்டிற்கு மட்டும் இவ்விலக்கு நீட்டிக்கப்பட்டது என்றும் ஆனால், கடந்த 2025ம் ஆண்டு விலக்கு அளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்- ஏப்ரல் 2025ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,86,184 என்றும் இதில், பகுதி I-ல் தமிழ்மொழிப்பாடம் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,86,089 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லையா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!
கடந்த ஆண்டில் 95 மாணவர்கள் மட்டுமே பகுதி I-ல் பிற மொழிப் பாடங்களை எழுதியுள்ளனர் என்றும் இவர்கள் 9ம் வகுப்பு வரை வேறு மாநிலங்களில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வில் விலக்கு என்பது வதந்தி என்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் குட்டி முருகர் என கூறப்பட்டு வந்த குழந்தை கைது? உண்மையை அம்பலப்படுத்திய TN FACT CHECK..!