தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தஞ்சையில் உலகப் புகழ்பெற்ற தலையாட்டி பொம்மை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று நேரில் சந்தித்தார். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
திமுகவைப் பொறுத்தவரை எப்படியாவது தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்களைப் பற்றியோ, அவர்களின் நலனைப் பற்றியோ எவ்விதக் கவலையும் இல்லை என அவர் சாடினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், தமிழகத்தில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவை கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளன. இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெசவாளர்களுக்கு நியாயமான கூலி பெற்று தரப்படும்! ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் மேக்வால் உறுதி!

தஞ்சை கைவினைஞர்கள் சந்திக்கும் மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் சிக்கல்கள் குறித்து கேட்டறிந்த அவர், தஞ்சை கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரம் உயர திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூடச் செய்து தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அனைத்தும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும், குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மத்திய அமைச்சர் மேக்வாலின் இந்தப் பேட்டி, குறிப்பாகச் சட்டம் ஒழுங்கு குறித்த அவரது விமர்சனங்கள், இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!