தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள சூழலில், குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்கள் மற்றும் தண்டனைக் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க அனுமதி இல்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி தற்போது சிறையில் உள்ள ஹரி நாடார், நாளை நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தான் வாக்களிக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.வாக்களிப்பது என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை; எனவே சிறையில் இருந்தாலும் நான் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறையில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்க முடியாது எனக் கூறி ஹரி நாடாரின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

இந்தத் தீர்ப்பை வழங்கும்போது நீதிமன்றம் 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 62(5)-ஐ மேற்கோள் காட்டியது: ஒரு நபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அல்லது காவல்துறையின் காவலில் இருந்தால், அவர் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவர். ஆனால், ஒரு நபர் தடுப்புக்காவல் (Preventive Detention) சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர் அஞ்சல் வழி வாக்கு (Postal Ballot) மூலம் வாக்களிக்கச் சட்டம் அனுமதிக்கிறது.
இதையும் படிங்க: தொடங்கியாச்சு தேர்தல் திருவிழா..!! தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 4 முக்கிய மையங்கள்..!!
நீதிமன்றம் தனது உத்தரவில், தண்டனை பெற்ற கைதிகளுக்கு மட்டுமல்லாமல், விசாரணைக் கைதிகளாகச் (Under-trial prisoners) சிறையில் இருப்பவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்பதைத் தெளிவுபடுத்தியது. இதன் மூலம், நாளை நடைபெறவுள்ள தேர்தலில் சிறையில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய முடியாது என்பது உறுதியாகியுள்ளது.
வாக்களிப்பது ஒரு சட்டப்பூர்வ உரிமை (Statutory Right) என்றாலும், அது நாடாளுமன்றம் இயற்றிய சட்ட விதிகளுக்கு உட்பட்டது என்பதை நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.
நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் வந்துள்ள இந்தத் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! – அமித்ஷாவின் சிவகிரி ரோடு ஷோ விபரங்களை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்!