தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக அமைதியான முறையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. – பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.), நாம் தமிழர் கட்சி (நா.த.க.) ஆகியவை முக்கியப் போட்டியாளர்களாகக் களமிறங்கின. மேலும், டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்து உருவாக்கிய புதிய கூட்டணியும் தனித்து வலிமையுடன் போட்டியிட்டது.
இதனால் நான்கு முனைப் போட்டி ஏற்பட்ட நிலையில், குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியதை பிரசாரக் களம் பிரதிபலித்தது. அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 4,023 பேர் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். பிரசாரம், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் என பரபரப்பான சூழலில் தேர்தல் பணிகள் முழுமையடைந்தன.

வாக்காளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்ற இந்த தேர்தல் திருவிழா, அமைதியான முறையில் நிறைவடைந்தது. இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் முக்கியப் பணி இன்று (மே 4) காலை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல், கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட கே.என் நேரு மற்றும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் ஆகிய இருவரும் பின்னடைவில் உள்ளனர்.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!
எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் வேளையில், தமிழகத்தில் அடுத்த ஆட்சி யார் வசம் செல்லும் என்பது விரைவில் தெளிவாகும். மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை நோக்கி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்..! இறுதி கட்ட பரப்புரை தீவிரம்..!