தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) சுமார் 5.22 சதவீதம் பங்களிப்பை வழங்கும் இத்துறை, கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆன்மிகம், மருத்துவம், கலாசாரம், சூழலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய சுற்றுலா உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வருகிறது.
உலகப் பொருளாதார தரவரிசையில் இந்தியா தற்போது 8-வது இடத்தில் உள்ள சுற்றுலாப் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உள்நாட்டுப் பயணிகள் வருகையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. வெளிநாட்டுப் பயணிகள் அடிப்படையில் மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்குப் பின்னர் தமிழ்நாடு முக்கிய இடத்தைத் தக்கவைத்துள்ளது.
கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மைத் தேர்வாக தமிழகம் விளங்குகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு சுமார் 30.80 கோடி உள்நாட்டுப் பயணிகளும், 11.61 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகமே ஷாக்... விஜய் ஆட்சியில் இப்படியா? - அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்...!
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாவட்டமாக திருச்சி முதலிடத்தில் உள்ளது. மாதத்துக்கு சுமார் 23 லட்சம் பயணிகள் திருச்சிக்கு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் திருச்சியின் மத்திய இருப்பிடம் மட்டுமல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் திருச்சி வழியாகச் செல்வதும், சர்வதேச விமான நிலையம் இருப்பதும் பெரும் பங்கு வகிக்கின்றன.

மேலும், தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), மத்திய சட்டப் பல்கலைக்கழகம், IIM, IIIT உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள், பாரத ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை போன்ற பெரும் தொழில் நிறுவனங்கள் திருச்சியில் அமைந்துள்ளன. சென்னைக்கு நிகரான நவீன மருத்துவ வசதிகளும் இங்கு உள்ளன. ஆசியாவிலேயே உயரமான கோபுரத்துடன் கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், வானுயர்ந்த மலைக் கோட்டை, சமயபுரம் மாரியம்மன் கோயில், புனித லூர்து அன்னை ஆலயம், நத்தர் வலி தர்கா உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் திருச்சியின் சிறப்பு.
முக்கொம்பு அணை, புளியஞ்சோலை, பச்சமலை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, பறவைகள் பூங்கா, ரயில் அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், அண்ணா அறிவியல் மையக் கோளரங்கம் ஆகியவை குடும்பச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், “திருச்சியில் இருந்து சென்னை, மதுரை, நாகப்பட்டினம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்ல நான்கு வழிச் சாலை வசதி உள்ளது.
சர்வதேசத் தர நட்சத்திர ஹோட்டல்கள், அமைதியான சூழல் ஆகியவை திருச்சியை சிறப்பான இடமாக்குகின்றன. மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் திருச்சியின் சுற்றுலாத் துறை இன்னும் பெரும் வளர்ச்சி அடையும்” என்றனர்.திருச்சி தமிழக சுற்றுலாவின் முகவரியாக விளங்கி வருவது பெருமைக்குரியது.
இதையும் படிங்க: திருச்சியில் அதிரடி சோதனை... ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல்..!