தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் பயணத்திலிருந்து திரும்பிய நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தொடர்புடைய அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். லண்டனில் கையெழுத்தான ரூ.15,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் நோக்கக் கடிதங்களை விரைவில் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
இந்த முதலீடுகள் மூலம் மாநிலத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளன. முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனுமதிகள், நில ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை விரைவுபடுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தனது வழிகாட்டுதல்களை வழங்குகிறார்.

தமிழ்நாட்டை 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை அடைய இந்த முயற்சிகள் முக்கியமானவை என்பதை அவர் வலியுறுத்துகிறார்.இதே நாளில், வரும் செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பான நடைமுறைகளும் ஆலோசிக்கப்படுகின்றன. தற்போது ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்தத் திட்டம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறவுள்ளனர். சென்னையில் முதலமைச்சர் இந்த விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். உணவுத் தயாரிப்பு, விநியோகம், தரக்கட்டுப்பாடு, சமையல் கூடங்களின் சுத்தம் ஆகியவற்றில் எந்தக் குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர் அர்லேகர்... லண்டனில் இருந்து திரும்பிய மறுநாளே சி.எம். விஜய்க்கு குட்நியூஸ்...!
மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்குச் சத்தான உணவு சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.அதேபோல், செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கவுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்தும் இன்று விரிவான ஆலோசனை நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டம், அண்ணா பிறந்தநாளன்று தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாகத் தேதி மாற்றப்பட்டு 25ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 755 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் பயன்பெறுவர். மோதிரங்களின் தரம், விநியோக முறை, பயனாளிகளின் பதிவு ஆகியவற்றை உறுதிசெய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் விவாதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!