மலேசியாவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்க மருத்துவம் தொடர்பான முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் விவகாரம் சமீபத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த இவர், தனது குடும்பத்திலும் கிராமத்திலும் முதன்முதலாக இத்தகைய உயர் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர். தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.36 லட்சம் வரை கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் ஆராய்ச்சிச் செலவுகளுக்காக உதவி கிடைக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டார்.
முதலாம் ஆண்டுக்கான முழுத் தொகையான ரூ.36 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் ஆண்டுக்கான நிதி தாமதமாகியதாக மாணவர் குற்றம்சாட்டினார். ஏப்ரல் மாதத்திலிருந்தே உதவித்தொகை கேட்டு வருவதாகவும், ஆவணங்களை சமர்ப்பித்தும் நிதி வரவில்லை என்றும், இதனால் ஆராய்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க வீடியோக்கள் வெளியிட்டார். ரோஹித் வெமுலாவுக்கு நடந்ததைப் போன்ற நிலை தனக்கும் ஏற்பட்டுள்ளதாக ஒப்பிட்டுப் பேசிய அவர், அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் தன்னை குறிவைத்து துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் சட்டசபையிலும் எழுப்பப்பட்டது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு விளக்கம் அளித்தார். மாணவருக்கு உதவித்தொகை மறுக்கப்படவில்லை என்றும், முதலாம் ஆண்டிற்கான நிதிக்குரிய செலவு விவரங்களையும் முன்னேற்ற அறிக்கைகளையும் முறையாக சமர்ப்பிக்காததால் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் மாணவரின் கல்வி பாதிக்காத வகையில் இதுவரை மொத்தம் சுமார் ரூ.48 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் ஆண்டுக்காக கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவாக ரூ.12 லட்சம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மீதமுள்ள ஆராய்ச்சிச் செலவுத் தொகைக்கான ஆவணங்கள் பல்கலைக்கழகம் வழியாக சரிபார்க்கப்பட்ட பிறகு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.மாணவர் தரப்பில், தேவையான ஆவணங்களை ஏற்கனவே அனுப்பிவிட்டதாகவும், சில ரகசிய ஆய்வு தொடர்பான விவரங்களைத் தவிர அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. பல்கலைக்கழகமும் இரண்டாம் ஆண்டு தேவைகளை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விவகாரம் அரசியல் மயமாக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படிங்க: தாராபுரத்தில் தவெக வேட்பாளர் கார் தாக்கப்பட்ட விவகாரம்! பானுமதி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 9 பேர் மீது வழக்கு!
எதிர்க்கட்சித் தலைவர்கள் மாணவருக்கு ஆதரவு தெரிவித்து, தேவைப்பட்டால் தாங்களே கல்விச் செலவை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தனர்.சமீபத்தில் அமைச்சர் வன்னியரசு மேலும் விளக்கம் அளித்தார். தம்பி பாரதிதாசனின் ஆராய்ச்சிப் படிப்புக்கான மீதமுள்ள உதவித்தொகை இரண்டு நாட்களில் வழங்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் எந்தவித அரசியலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். மாணவரின் கல்வி நலனே முதன்மையானது என்றும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நிதி விடுவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். துறை தரப்பில், மீதமுள்ள கோரிக்கை தொடர்பாக பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை கோரி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் பதில் கிடைத்தவுடன் உடனடியாக நிதி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இடைத் தேர்தல் வந்தாச்சு..! களமிறங்கும் CM விஜய்... அனல் தெறிக்கும் பிரச்சாரம்..!!