மதுராந்தகத்தில் நடந்த மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். பின்னர் புரட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்களுடன் பணியாற்றினேன். இன்று தளபதி விஜய் அவர்களுடன் பயணிக்கிறேன். 1972-இல் எம்.ஜி.ஆர். இயக்கத்தைத் தொடங்கியபோது, "இந்த இயக்கம் 100 நாட்கள் கூட நீடிக்காது" என்று பலர் கூறினர். ஆனால் அவர் உயிருடன் இருந்தவரை தமிழகத்தின் நிரந்தர முதல்வராக வரலாறு படைத்தார். அதன்பிறகு ஜெயலலிதா அவர்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்து வரலாறு படைத்தார். இன்று தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக விளங்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்கள், தமிழக அரசியலில் நிலையான வரலாற்றை உருவாக்கப் போகும் தலைவர் என நான் நம்புகிறேன்.
இன்று தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருகாலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் இன்று மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். சிலர் இன்னும் அறிக்கைகள் வெளியிட்டு அரசியலில் நிலைத்திருக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் தீர்ப்பு மிகப்பெரியது. இங்கே பேசப்பட்ட மற்றொரு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற பேச்சுகள் ஒருகாலத்தில் இருந்தன. ஆனால் அந்த அரசியல் சமன்பாட்டை முறியடித்த சக்தி தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சிதான். அதற்கு காரணம் நமது தலைவர் தளபதி விஜய்.
இதையும் படிங்க: விஜய் மீது பொறாமையால் விமர்சிக்கின்றனர்! அவர்கள் தற்குறி அல்ல! தவெகவின் அம்புக்குறி! - ராகவா லாரன்ஸ்!

இன்று இங்கே நிற்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த நம்பிக்கை வருகிறது. 20, 25 வயதுடைய இளைஞர்கள் மட்டுமல்ல, 10, 11 வயது குழந்தைகளுக்குக் கூட இந்த இயக்கத்தின் மீது ஈர்ப்பு உள்ளது. ஒரு சிறுவன் தனது பாட்டியிடம் "விசில் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும்" என்று கூறி வாக்குச்சாவடிவரை அழைத்துச் சென்ற சம்பவத்தைக் கேட்டேன். இன்று குழந்தைகளாக இருக்கும் அவர்கள், நாளை வாக்காளர்களாக மாறுவார்கள். அதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
நமது தலைவர் மனிதநேயமிக்கவர். 42 ஆண்டுகள் அரசியலில் பயணித்த என்னை, ஒரு கட்டத்தில் தூக்கி எறிந்தபோது, என்னை மீண்டும் தாங்கி நிறுத்தி அமைச்சராக்கிய பெருமை அவருக்கே சொந்தம். நான் எப்போதும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் படங்களை வைத்திருப்பேன். அதை பார்த்து, "அம்மா படத்தை வைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும்" என்று கூறிய ஒரே தலைவர் தளபதி விஜய் அவர்கள் தான்.
எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கும் இதுவே காரணம். அத்திக்கடவு-அவினாசி திட்ட விழாவில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லாமல் தன் படத்தை மட்டும் முன்னிறுத்தியதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதன்பிறகே எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. தலைவர்களையும், அவர்களுக்கு வாக்களித்த மக்களையும் மறந்தவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது.
இன்று அ.தி.மு.க. ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் போல உள்ளது. அந்தக் கட்சியிலிருந்து பலரும் வெளியே வந்து நமது இயக்கத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலை நிர்வாகிகள் தொடர்ந்து வருவார்கள். எனவே நீங்கள் அனைவரும் உறுதியாக இருந்து, வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும். இதனுடன் என் உரையை நிறைவு செய்கிறேன். அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும் என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!