நடிகர் விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என சொல்லிக்கொண்டிருக்கும் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களை கவரும் வகையில் பல்வேறு செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்தார்.

2022-2023 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், 2023 -2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கி மேடையில் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: விஜய் எங்க அப்பா..!! கொச்சையாக பேசிய வேல்முருகன்.. மாணவியின் சாட்டையடி பதில்..!
இந்த நிலையில் 3வது ஆண்டாக, இந்த ஆண்டும் 2024 -2025 கல்வியாண்டில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது விழா வழங்க முடிவு செய்தார் விஜய்.

அதன்படி கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கும் தவெக தலைவர் விஜய் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழை விஜய் வழங்கி வருகிறார்.

இவ்விழாவில் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் பேனா பரிசு வழங்கி விஜய் கவுரவித்தார். முன்னதாக மாணவி ராஜேஸ்வரி பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் விழாவில் விஜய், "மாணவி ராஜேஸ்வரிக்கு வாழ்த்துகள். அவரது வீட்டில் மின்சார வசதி இல்லை. வெறும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து சாதித்திருக்கிறார். அவருக்கு விஞ்ஞானி ஆகனும்னு ஆசை இருக்கிறது. கண்டிப்பா ஒருநாள் விஞ்ஞானியாக ஆவார்" என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய மாணவி ராஜேஸ்வரி, நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்ததை அனைவரும் பார்த்தீர்கள், நான் இந்த மேடைக்கு வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. நீங்களும் என்னை போல் ஆக வேண்டுமென்றால் உங்களுக்கு உள்ள ஒரே வழி கல்வி மட்டும்தான், அதை எப்போதும் விட்டு விடாதீர்கள். விஜய் அண்ணாவை பார்க்க வேண்டும் என்பது சின்ன வயதில் இருந்து பெரிய கனவு, அது இப்போது நினைவாகிவிட்டது. ரொம்ப மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் தவெக? நயினார் நாகேந்திரன் போட்ட திட்டத்தை தவிடு பொடியாக்கிய விஜய்..!