தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை கரூர் சம்பவம் முடக்கியிருந்த நிலையில், 28 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார். கட்சியின் அன்றாட பணிகளை இந்தக் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நவம்பர் 5 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என் விஜய் அறிவித்து உள்ளார். இது தொடர்பான விஜய் அறிவிப்பில், நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது என்று கூறியுள்ளார். சூழ்ச்சியாளர்கள். சூதுமதியாளர்கள் துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும் அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது என்று தெரிவித்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது என தனது தொண்டர்களுக்கு விஜய் தெரிவித்துள்ளார். இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை என்றும் கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிரம்பும் அணைகள்... கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்... எச்சரிக்கை..!
கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய விஜய், இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினார். ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளதாகவும், வரும் ஐந்தாம் தேதி (நவம்பர் 5) புதன்கிழமை அன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் அறிவித்து உள்ளார். வருங்காலம் நமதென்று காட்ட தீர்க்கமாகத் திட்டமிடுவோம் என்று விஜய் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: புயல் வருதா? தற்போதைய நிலவரம் என்ன?... இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்...!