முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடக்கும். அதில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். பழனியில் அனைத்து திருவிழாக்களும் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்பட்டாலும் அனைத்து விழாக்களுமே மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி தலத்தில் இருக்கு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்தே துவங்கப்படும்.

ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் வைகாசி விசாக திருவிழா, இந்த ஆண்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா..! 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு.. முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது..!
இதையொட்டி இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டதையடுத்து, வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார்

பின்னர் மண்டபத்தில் வைத்து விநாயகர் பூஜை, கொடிமரம், கொடி படத்திற்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, விண்ணை பிளந்த பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் காலை 11.10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு, யானை, தங்கக்குதிரை போன்ற வாகனத்திலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை உலா நடைபெறுகிறது. 6-ம் திருநாளான 8- ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள் 9-ம் தேதி வைகாசி விசாக நாளன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 6.30 மணிக்கு மங்கல இசை, பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிஎஃப்-யில் வந்தது அதிரடி மாற்றங்கள்... இதை உடனே நோட் பண்ணிக்கோங்க...!