செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசிய மிசா தொடர்பான கருத்தும், அவர் செய்த உடல்மொழி சைகையும் தற்போது அரசியல் சர்ச்சையாகியுள்ளது.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த முதல்வர் விஜய், திமுகவினர் தொடர்ந்து “மிசாவைப் பார்த்தவர்கள்” என்று கூறுவதாகக் குறிப்பிட்டு, மிசா காலத்தில் நடந்த வரலாறு அனைவருக்கும் தெரியும் என்று பேசினார். அப்போது அவர் வலது கையை தாடைக்கு அருகில் வைத்து சைகை செய்தார்.
இந்த சைகைதான் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் சிறையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதில் அவரது தாடை காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் விஜய் அந்த சைகையைச் செய்ததாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், அது ஸ்டாலினின் உடல் நிலையை கேலி செய்யும் உருவகேலி/உடல்கேலி என்று விமர்சனங்கள் எழுந்தன
இதையும் படிங்க: முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!
சர்ச்சை அதிகரித்ததைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தனது உடல்மொழி “எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, எவ்வித உள்நோக்கமும் கொண்டதில்லை” என்று விளக்கம் அளித்தார். தனிப்பட்ட முறையில் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயின் சர்ச்சைக்குரிய சைகை மட்டுமின்றி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முரசொலி மாறன் உள்ளிட்டோர் குறித்து சட்டப்பேரவையில் பேசியது தொடர்பாகவும் திமுக தரப்பு நடவடிக்கை கோரியுள்ளது. மேலும், விஜயின் பேச்சைக் கண்டித்து செப்டம்பர் 12-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
சி.எம்.விஜயின் இந்த செயல் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், தவெக தலைமையிலான மதசார்பற்ற சமூக வெற்றிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய உரையின்போது, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் அமைந்த அவரது உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, தனிநபரின் தன்மதிப்பைக் காயப்படுத்துவது ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்துள்ள திருமாவளவன், மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் உயர்ந்தது என்றும், இனிவரும் காலங்களில் முதலமைச்சர் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மிசா காலத்து ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து சட்டத்துறை அமைச்சர் தவறான கருத்தைப் பதிவிட்டிருப்பது வரலாற்றுப் பிழை என்றும், அதனை அமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!