திருவனந்தபுரம்: கேரள அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீஷன் இன்று கேரள முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணி ஆட்சி மீண்டும் கேரளாவில் அமைந்துள்ளது.
கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்ற கேரள சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்று யுடிஎஃப் கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாக இருந்தது. மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் முடிவு எடுப்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது.
காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர், வி.டி.சதீஷனின் பெயரை இறுதி செய்தது. இன்று திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கேரள கவர்னர் அர்லேக்கர், சதீஷனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து 20 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 பேர் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 8 பேர் அடங்குவர்.
இதையும் படிங்க: மூத்த திரைத்துரை ஆளுமை கே. ராஜன் மறைவு! தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் வருகை தந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களும் விழாவில் பங்கேற்று சதீஷனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பினாய் விஸ்வம், பாஜ மாநிலத் தலைவர் ராஜிவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ள சதீஷனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மக்களின் தேவைகளை நிறைவேற்ற புதிய அரசுக்கு மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்” என அவர் கூறியுள்ளார்.
வி.டி.சதீஷன் கேரள காங்கிரஸில் நீண்டகால அனுபவம் கொண்ட தலைவராவார். அவரது தலைமையில் புதிய அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது டிஎஸ்பியிடம் வழக்கறிஞர்கள் புகார்!