தமிழக சட்டசபை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது இந்திய அளவில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.
ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று 344 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலிகள் சரணாலயம் மலை வனப்பகுதிக்குள், சேதம் அடைந்த கரடு முரடான சாலை மின்சார வசதி இல்லாத வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
நாளை காலை 7 வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் இந்த 245 ஆம் எண் வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அலுவலர்கள் இன்று மாலை வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு செல்வார்கள். அதிக தொலைவு அடர் வனப் பகுதிக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் இந்த வாக்குச்சாவடிக்கான அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆண்டிபட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா தெரிவித்தார்.
நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு எல்லாம் 100% வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடியாக வெள்ளிமலை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு என தனியாக மண்டல அலுவலர், மண்டல அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர், சப் இன்ஸ்பெக்டர், துணை ராணுவ வீரர், மற்றும் உதவியாளர் என ஆறு நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கரடு முரடான மலைப்பாதையில் பயணம் செய்ய 4 x 4 ஜீப் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி களத்தில் பதற்றம்: ஒருபக்கம் விறுவிறு வாக்குப்பதிவு..!! மறுபக்கம் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்?