விருதுநகர் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ளது கூமாப்பட்டி கிராமம். இதன் அருகில் பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணைகள் உள்ளன. இந்த கிராமத்து இளைஞர் ஒருவர் அணையில் குளித்தபடி, இயற்கை சூழலையும் காட்டி ஒரு வீடியோ வெளியிட்டார். கூமாப்பட்டியின் அழகை வர்ணித்து இது ஒரு ஐலேண்ட் என அவர் அழைப்பு விடுத்தது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் ஆனது.
கூமாப்பட்டிக்கு பலர் படையெடுத்தனர். கூமாபட்டி குறித்தும் வீடியோ வெளியிட துவங்கினர். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. கூமாப்பட்டி டிரெண்டாகிய நிலையில், இந்த அணைகளுக்கு டூரிஸ்ட்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

வைரல் வீடியோவில் பேசிய இளைஞர், சில ஆண்டுக்கு முன் கூமாபட்டியில் 10 கோடியில் மேம்பாட்டு பணி நடக்கும் என அறிவித்ததாகவும், எதுவுமே நடக்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பாஜக ’ஷாக்’... திமுக ‘ராக்’.. ராமதாஸ் செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பின் பின்னணி...!
அதற்கு விளக்கம் அளித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிளவுக்கல் பெரியாறு அணையில் 10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடக்கும் என முதல்வர் அறிவித்தார். அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசிடம் ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும், என கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து... நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் ! எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு, பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன்.
போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்.. கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல், கோவிலாறு அணைகளுக்கு அருகில், இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.

அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதைப் போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை.
தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே! மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள இடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!

கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!" என்று பதிவிட்டுள்ளார். ஜெயசீலன், தற்போது சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதையும் படிங்க: வரிப் போட்டு விவசாயி வயித்துல அடிக்காதீங்க... நிலத்தடி நீர் வரிக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!