2021-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, 4 ஆண்டுகளாக அதனை செயல்படுத்தாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகப், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் திமுக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்த உடன், முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்ததை அண்ணாமலை நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக என்று அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: 'வீர வசனம் பேசும் திமுக அமைச்சர்களை அடக்கியே தீருவோம்..!' பயமுறுத்தும் அண்ணாமலை..!

கடந்த ஆண்டு, விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக அரசிடம் நிதி இல்லை. சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும், வாங்கிய கடனை விவசாயிகள் குறித்த காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் ஆணவமாகப் பேசியதை அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார். பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை, நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். திமுகவின், கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது என்று அண்ணாமலை அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாகி விட்டது.. திமுக அரசு மீது பாயும் பாஜக தலைவர் அண்ணாமலை...