டெஹ்ரான்/புதுடில்லி, மார்ச் 9: ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு தங்கியுள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான இந்தியர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இன்னும் சிலர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் தூதரக உதவியை மறுத்து தனியாக எல்லைப்பகுதிகளை நோக்கி செல்ல முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஈரானில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக தூதரக உதவி இல்லாமல் எல்லை பகுதிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்” என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தூதரகத்திடமிருந்து தெளிவான அறிவுரைகளைப் பெற்ற பின்னரே எல்லை நோக்கி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்! எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது பார்லி.,!! ஒத்திவைப்பு!
மேலும், “தனிநபர்கள் யாரும் தூதரக உதவி இல்லாமல் ஈரானை விட்டு வெளியேறி, மூன்றாவது நாட்டுக்குள் நுழைய முடியாமல் போனால், அவர்களுக்கு தூதரகம் உதவ முடியாத நிலை ஏற்படும்” என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியர்கள் தனியாக எல்லைக்கு செல்வது ஆபத்தானது என்றும், தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூதரகத்தை தொடர்பு கொள்ள கீழ்கண்ட எண்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது:
மொபைல்: +98 912 810 9115, +98 912 810 9102, +98 912 810 9109, +98 9932179359
இமெயில்: cons.tehran@mea.gov.in
ஈரானில் தற்போது சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் ஆகியோராவர். போர் தீவிரமடைந்ததால் பலர் ஏற்கனவே வெளியேறியுள்ளனர். ஆனால் சிலர் தங்கள் சொந்த ஏற்பாட்டில் எல்லை நோக்கி செல்ல முயல்வதால் தூதரகம் இந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் தூதரகம் தொடர்ந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போர் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், இந்தியர்கள் தூதரக அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஒரு புறம் குண்டு மழை!!மறுபக்கம் அமில மழை!! நரக வேதனை அனுபவிக்கும் ஈரான் மக்கள்!!