தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்கள் தொல்லை மற்றும் வெறிநாய்க்கடி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டு மிக முக்கியமான அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "தமிழகத்தில் வெறிநாய்க்கடியால் (Rabies) ஏற்படும் சாமானிய மக்களின் உயிரிழப்புகள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட முடியாது, அவை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இதற்காகப் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான தடுப்பூசிகளை எப்போதும் தடையின்றிக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்" என்று சுகாதாரத் துறைக்கும் உள்ளாட்சித் துறைக்கும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

மேலும், தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தொலைநோக்கு அடிப்படையிலான ஒரு மெகா திட்டத்தையும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 'விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள்' (Animal Birth Control Centres - ABC) கட்டாயமாக நிறுவப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார். ஏபிசி மையங்கள் மூலம் தெருநாய்களுக்குப் பாதுகாப்பான முறையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் போடும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் அசுர வேகத்தில் கையில் எடுக்க வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் முதலமைச்சர் விஜய் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறவினருக்குத் தொடர்பா?" - ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கில் முதல்வர் பதிலளிக்க திமுக கேள்வி!
இதையும் படிங்க: போஸ் கொடுத்த முதல்வர்... இப்போது பொறுப்பேற்பாரா? மசாகான் டாக் விவகாரத்தில் அதிமுக காட்டம்!