உஸ்பெகிஸ்தானின் தாஷ்கெண்ட் நகரில் சர்வதேச அளவிலான UzCHESS CUP MASTERS செஸ் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியாவின் நம்பர்-1 வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டை - பிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது.

இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு ரூபாய் 17 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசையில் 11.3 புள்ளிகளை அதிகம் பெற்று குகேஷை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

2778.3 புள்ளிகளுடன் உலக செஸ் நேரடி தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. இதன் மூலம் செஸ் வரலாற்றில் முதன் முறையாக உலக செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் இரண்டு தமிழர்கள் இடம்பிடித்து உள்ளனர். மேலும், இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றார். அதிலும், உலக சாம்பியன் குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரிலும் அவர் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார்.