சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை ஐ.சி.சி. 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கௌரவம் அளித்து வருகிறது. அதன்படி அந்த பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐ.சி.சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. லண்டனில் உள்ள அபே ரோடு ஸ்டுடியோவில் நடந்த ‘A Day with the Legends’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் இடம்பெற்றுள்ளார்.

2007 ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை, 2011 ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் இந்தியாவை வெற்றி பெற வழிநடத்திய ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி. 17,266 சர்வதேச ரன்கள், 829 விக்கெட் கீப்பிங் டிஸ்மிஸல்கள் மற்றும் 538 போட்டிகளில் விளையாடியதன் மூலம் அவர் தனது சீரான செயல்பாடு, உடற்தகுதி மற்றும் நீண்ட கால தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது அமைதியான மனநிலை, தந்திரோபாய புத்திசாலித்தனம் மற்றும் குறுகிய வடிவ கிரிக்கெட்டில் புரட்சிகரமான அணுகுமுறை ஆகியவை அவரை உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக உயர்த்தியுள்ளன.
இதையும் படிங்க: விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர்.. கோலிக்குக் கிடைத்த மகத்தான பாராட்டு!

2004இல் அறிமுகமான தோனி, 90 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகளுடன் இந்தியாவை வழிநடத்தினார், 200 ஒருநாள் போட்டிகளில் 110 வெற்றிகளைப் பெற்றார், மேலும் 2019 வரை 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடினார். அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். அதனால் அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் கேப்டனான தோனி, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா, கிரேம் ஸ்மித், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, இங்கிலாந்தின் சாரா டெய்லர் மற்றும் பாகிஸ்தானின் சனா மிர் ஆகியோருடன் இந்த மதிப்புமிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

எம்.எஸ் தோனிக்கு முன் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினு மன்கட், டயானா எடுல்ஜி, வீரேந்தர் சேவாக் மற்றும் நீது டேவிட் ஆகியோர் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தோனியின் சாதனைகளையும், இந்த அங்கீகாரத்தையும் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "ஐ.சி.சி. ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்ததற்கு வாழ்த்துகள் தோனி. அதிக ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி, அதிக ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளீர்கள். 3 ஐ.சி.சி. உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 ஐ.பி.எல். பட்டங்கள் மற்றும் சாம்பியன்ஸ் லீக் வெற்றிக்கு வழிநடத்தியது வரை, நீங்கள் ஒரு சிறந்த பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளீர்கள்.
நீங்கள் தலைமையை அமைதியுடன் மறுவரையறை செய்துள்ளீர்கள். விக்கெட் கீப்பிங்கை ஒரு கலையாக மாற்றியுள்ளீர்கள். மேலும் தெளிவு மற்றும் உறுதியின் மூலம் ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் பயணம் இப்போது கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்துள்ளது. நீங்கள் எப்போதும் 'தல தோனி' என்று புகழப்படுவீர்கள்" என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், #ICCHallOfFame இல் சேர்க்கப்பட்டதற்கு @msdhoniக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ்.தோனிக்கு பொருத்தமான மரியாதை என எடப்பாடி கூறினார்.