இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் உடற்தகுதி சவாலை எதிர்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக அவர் மைதானத்திற்குத் திரும்புவது மேலும் தாமதமாகும் என்ற செய்தி கிரிக்கெட் வட்டாரங்களில் பரவியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேசிய அணிக்காக மீண்டும் விளையாடத் தயாராகி வந்த பாண்டியா, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு முழு உடற்தகுதியை அடைந்திருந்தார்.
ஆனால், சமீபத்தில் அவரது காலில் ஏற்பட்ட லேசான தசைப்பிடிப்பு காரணமாக பந்துவீச்சு பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்களின்படி, பாண்டியா எந்தவித சிரமமும் இல்லாமல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். எனினும், காலில் ஏற்பட்ட சிறிய அசௌகரியத்தால் அவரைப் பந்துவீசுவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேட்டிங் மற்றும் பொதுவான உடல் அசைவுகளில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், முழுமையாக குணமடைந்ததை அகாடமி உறுதிப்படுத்தும் வரை அவர் போட்டியில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார். செப்டம்பர் 13 முதல் தொடங்கவுள்ள ஆப்கானிஸ்தான் தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், தேவையான உடற்தகுதியை அடைவது கடினமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மே 24 அன்று விளையாடியதே அவரது கடைசி போட்டியாகும்.
இதையும் படிங்க: சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு!

அதன்பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்தாலும், கால் தசைப்பிடிப்பு காரணமாக விலகினார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. நடப்பாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடாத நிலை தொடர்கிறது. இதேபோல் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் ரெட்டி உள்ளிட்ட முக்கிய வீரர்களும் காயங்களால் அவதிப்பட்டு வருவதால், தேசிய கிரிக்கெட் அகாடமியின் மீட்பு மற்றும் பயிற்சி முறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியைத் தேர்வுசெய்ய அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு செப்டம்பர் 3 அன்று கூடவுள்ளது. இந்தத் தொடரில் ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியே அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ச்சியான உடற்தகுதிப் பிரச்சினைகள் காரணமாக 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் பாண்டியாவின் பங்கேற்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. 50 ஓவர் போட்டிகளில் முழுமையாக 10 ஓவர்கள் வீசும் திறன் அவரிடம் இருக்குமா என்ற கவலை பிசிசிஐ தரப்பில் நிலவுகிறது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் பிரிவில் அவரது இடம் முக்கியமானதாக இருப்பதால், விரைவான மீட்சிக்கான நம்பிக்கைகள் தொடர்கின்றன.
இதையும் படிங்க: 15 வயதில் தரமான சம்பவம்! 57 ஆண்டு பழைய துலீப் கோப்பை சாதனையை முறியடித்தார் வைபவ் சூரியவன்ஷி!