2026-ம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் கவனம் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மைதானத்தை நோக்கி திரும்பியுள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் ஐரோப்பிய சக்திவாய்ந்த அணியான ஸ்பெயின் இடையேயான இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. உலக சாம்பியன் பட்டத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தியாவிலும் உலகக்கோப்பை போட்டிக்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக கால்பந்து மீது தனித்துவமான ஆர்வம் கொண்ட மாநிலமாக கேரளா மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. உலகக்கோப்பை தொடர் தொடங்கிய நாளிலிருந்தே கேரளாவின் பல பகுதிகளில் அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகளின் கொடிகள், பிரம்மாண்ட கட்-அவுட்கள், ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திரையிடல்கள் நடைபெற்று வருகின்றன.
கால்பந்து விளையாட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் கேரள மக்களின் உணர்வை மதிக்கும் வகையில், கேரள அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நள்ளிரவில் நடைபெறுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போட்டியை சிரமமின்றி காணும் வகையில், மறுநாள் மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் சதீசன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையா? யமாலின் புதிய வரலாறா? அர்ஜென்டினா Vs ஸ்பெயின்! வெல்லப்போவது யார்?

இந்த அறிவிப்பு வெளியானதும், சமூக வலைதளங்களில் கேரள அரசின் முடிவு வேகமாக வைரலாகி வருகிறது. கால்பந்து ரசிகர்கள் இந்த முடிவை வரவேற்று அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி பெரிய திரைகளில் போட்டியை காண சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மறுபுறம், அமெரிக்காவின் நியூஜெர்ஸி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் நேரலையில் இந்தப் போட்டியை காணவுள்ளதால், இது 2026 உலகக்கோப்பை தொடரின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகக் கருதப்படுகிறது. கேரள அரசின் விடுமுறை அறிவிப்பும் இந்த உலகக்கோப்பை காய்ச்சலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
இதையும் படிங்க: மெஸ்ஸி மேஜிக் சம்பவம்.. சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் பாய்ந்தது அர்ஜென்டினா!