மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் (AMMA) கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு மாற்றங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வரும் நிலையில், தற்போது அந்த அமைப்பின் வரலாற்றிலேயே மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக பெண் தலைமை உருவாகி வரலாற்று சாதனை படைத்திருந்த AMMA அமைப்பில், தற்போது முழு நிர்வாகக் குழுவும் கூட்டாக ராஜினாமா செய்திருப்பது மலையாள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
AMMA அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 31 ஆண்டுகளாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தது. நிர்வாக பொறுப்புகள் பெரும்பாலும் ஆண் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் அந்த வரலாற்றை முற்றிலும் மாற்றியது. அந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பிரபல பின்னணி குரல் கலைஞர் குக்கு பரமேஸ்வரன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர்களின் தலைமையில் 17 பேர் கொண்ட பெண் உறுப்பினர்களை அதிகமாக கொண்ட புதிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டதால், இது மலையாள சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்பட்டது. பெண்கள் தலைமையிலான நிர்வாகம் அமைப்பில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பதவியேற்று சுமார் 10 மாதங்களிலேயே அந்த நிர்வாகம் கடுமையான சிக்கல்களை சந்தித்தது. நிர்வாகத்திற்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, முடிவெடுப்பதில் ஏற்பட்ட முரண்பாடுகள், மற்றும் நிதி தொடர்பான சர்ச்சைகள் ஆகியவை அமைப்பை பாதிக்கத் தொடங்கின.
இதையும் படிங்க: வருங்காலத்துல திமுகவே இருக்காது.. So இனி போட்டியே இல்ல..!! CM விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக நடிகர் ஜெய் சொன்ன ஐஸ் வாழ்த்து..!
குறிப்பாக தலைவி ஸ்வேதா மேனனுக்கும் பொதுச் செயலாளர் குக்கு பரமேஸ்வரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, அலுவலக மேலாளர் அதுல்யா பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்வேதா மேனனுக்கு தெரியாமல் பொதுச் செயலாளர் குக்கு பரமேஸ்வரனும் பொருளாளர் உன்னி சிவபாலும் இணைந்து அந்த முடிவை எடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அந்த முடிவு திரும்பப் பெற்று அதுல்யா மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து பொருளாளர் உன்னி சிவபால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதும் நிர்வாகத்தில் பதற்றத்தை அதிகரித்தது. இதனிடையே, பிப்ரவரி மாதம் நடைபெற்ற குடும்ப சங்கமம் விழாவிற்காக ஒரு கோயில் அறக்கட்டளையிடமிருந்து சுமார் ரூ.70 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, அதன் கணக்குகள் எங்கு உள்ளது என்பதில் தெளிவான விளக்கம் வழங்கப்படாதது அமைப்புக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. நிதி மேலாண்மை குறித்த கேள்விகள் எழுந்ததால் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியது.
இதே காலகட்டத்தில், இணைச் செயலாளர் அன்சிபா ஹசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டினி டோம் மற்றும் லட்சுமி பிரியா ஆகியோருக்கு எதிராக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும், அதற்கு பதிலாக லட்சுமி பிரியாவும் அன்சிபா மீது புகார் அளித்ததும் விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியது. இதனால் அமைப்புக்குள் குழு மோதல் தீவிரமடைந்தது.

இந்த தொடர்ச்சியான சர்ச்சைகளை சமாளிக்க பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கொச்சி அருகே காக்கநாட்டில் AMMA அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் மட்டுமே நேரில் கலந்து கொண்டார். மம்மூட்டி உள்ளிட்ட மற்ற முன்னணி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் குடும்ப சங்கமம் விழாவிற்காக பெறப்பட்ட ரூ.70 லட்சம் நிதி தொடர்பாகவும், நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பாகவும் தீவிர விவாதம் நடைபெற்றது. நடிகர் பாபுராஜ் ஜாக்கோப் தலைமையிலான சில உறுப்பினர்கள் தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நடிகர் மோகன்லால் தாம் எந்த ஒரு தரப்பையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார். ஆனால் நீண்ட நேர ஆலோசனைகளும், சமரச முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், இறுதியில் அதிரடி முடிவாக ஸ்வேதா மேனன் தலைமையிலான 17 பேர் கொண்ட முழு நிர்வாகக் குழுவும் கூட்டாக ராஜினாமா செய்தது. மேலும், ஸ்வேதா மேனன் தனது தலைவர் பதவியை மட்டுமின்றி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்திருப்பது இந்த முடிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
இதன் மூலம், கடந்த ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக உருவான பெண் தலைமையிலான நிர்வாகம் மிகக் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது. நிர்வாகம் முழுமையாக கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைப்பை தற்காலிகமாக நடத்த ஒரு இடைக்காலக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரமேஷ் பிஷாரடி இந்த தற்காலிகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு அடுத்த கட்ட நிர்வாகத் தேர்தல் மற்றும் அமைப்பின் செயல்பாடுகளை கவனிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி ராஜினாமா மலையாள திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் பெண்கள் தலைமையில் புதிய மாற்றம் ஏற்பட்டது என்ற நம்பிக்கை இருந்த நிலையில், சில மாதங்களிலேயே அந்த நிர்வாகம் முற்றிலும் கலைந்தது திரையுலக வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. AMMA அமைப்பின் எதிர்காலம் குறித்து தற்போது மலையாள சினிமா உலகமே கவலையுடன் கவனித்து வருகிறது.
இதையும் படிங்க: ஷாருக்கான், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன் சாதனைகள் ஓவர்..!! இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ரன்வீர் சிங்..!