நடிகர் சிவாஜியின் மிகப்பெரிய ரசிகரான நடிகர் ராஜேஷ் அவர்கள் இன்று உலகத்தில் இருந்து பிரியாவிடை கொடுத்திருக்கிறார். எப்பொழுதும் ஒரு சில மனிதர்களை கண்டால் இவர்களைப் போல் வாழ வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகர் ராஜேஷ். இவர் தனது வாழ்க்கையில் சிறந்த ஆசிரியராக ஆரம்பித்து பின்பு நடிகர் ஆக மாறி சிறந்த படைப்பாளியாக ஒன்பது புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரிடம் பேசுபவர்கள் சற்று ஆறுதல் பெரும்படியாக பேசும் குணமுடைய ராஜேஷ், ஜோதிடம் சம்பந்தமான பல விஷயங்களை தொலைக்காட்சிகளில் பேசி அனைவரது மனதையும் ஆறுதல் படுத்துபவர்.

75 வயதான ராஜேஷ், சீரியல் மற்றும் சினிமாவில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து தனக்கான ஒரு இடத்தை பெற்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார். கடந்த 2000 மாவது ஆண்டில் 'அழுக்கு வேட்டி' என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார் ராஜேஷ், அதனைத் தொடர்ந்து 'சவுக்கடி' என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். பின்பு 2001ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அலைகள்' என்ற சீரியலில் 'கிருஷ்ணா' என்ற கேரக்டரில் பலரது மனதையும் கொள்ளை கொண்டு சென்றார்.

இதனை அடுத்து கணவருக்காக, சுவாமி ஐயப்பன், ஆண்பாவம், தாயம், முடிவில்லா ஆரம்பம், களத்து வீடு, ரோஜா, சூரியவம்சம், டைகர் மாணிக்கம், ஜில்லுனு ஒரு காதல், கனா காணும் காலங்கள், கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகர் ராஜேஷ். மேலும், 1987 முதல் 1991 வரை அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் ராஜேஷ். அடுத்ததாக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பில் வகித்தவர். இப்படி திரையுலகில் பல சாதனைகளை படைத்த நடிகர் ராஜேஷ் இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கூலி படத்தின் பட்ஜெட்டே இவ்வளவு கோடின்னா.. படம் வசூல் எத்தனை கோடியாக இருக்கும்..!

அவரது உடல் மக்கள் பார்வைக்காக ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

அதன்படி, "என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவு செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் படத்தில் சந்தானம்..! 11 ஆண்டுகளுக்கு பின் இணையும் அட்ராசிட்டி கூட்டணி..!