திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் P. C. ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய செழியன், பின்னர் தனித்துவமான ஒளிப்பதிவின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய “டூ லெட்” திரைப்படம் தேசிய அளவில் பாராட்டைப் பெற்று, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அந்தப் படம் அவரது இயக்குநர் திறமையை வெளிப்படுத்திய முக்கிய படைப்பாக அமைந்தது.
இதையும் படிங்க: சிம்புவுக்கு அம்மா.. ஆண்ட்ரியா-வா.. 'அரசன்' படத்துல பல டிவிஸ்ட் இருக்காமே..!! வெற்றிமாறன் படத்தின் மாஸ் அப்டேட் கிடைச்சாச்சி..!
தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்தவர். கல்லூரி என்ற திரைப்படத்தின் அறிமுகமாகி, இயக்குநர் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகி, அப்படத்தின் ஒளிப்பதிவுக்காக 2013ம் ஆண்டு இலண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினைப் பெற்றார்.
இவர் உலக சினிமா குறித்த நிகழ்வுகளைத் தொடராக 2005 முதல் 2007 வரை ஆனந்தவிகடனில் எழுதினார். இத்தொடர் ”உலக சினிமா” என்ற நூலாக வெளிவந்தது. கார்மோனியம் (2004) என்ற சிறுகதைக்காக கதா விருதினைப் பெற்றார். ”தமிழ்ச் சிறுகதைகளில் உளக்காட்சிகள்” (2004-2006) என்ற ஆய்வுக்காக இந்தியு அரசின் கலாச்சாரத் துறையின் விருது பெற்றுள்ளார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், எழுத்தாளர் செயகாந்தன் ஆகியோர் பற்றிய ஆவணப் படங்களைத் தயாரித்துள்ளார். இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியாக தெற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள நூல்களை வெளியிட்டுள்ளார். தெற்கத்திய இசை, பேசும் படம், முகங்களின் திரைப்படம் ஆகிய பத்து தொகுதி நூல்களை வெளியிட்டுள்ளார். 2012இல் நார்வே தமிழ் சினிமா திருவிழாவில் ”கள்ளத் தோணி” குறும்படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினைப் பெற்றார். இவர் இயக்கிய டூலெட் தமிழ்த் திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னையின் தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செழியன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று காலை 10 மணி முதல் சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடில் வளாகத்தில், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானது, தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ‘லியோ’ முதல் ‘கருப்பு’ வரை கவனம் ஈர்த்த நடிகை..!! பிக்பாஸ் புகழ் ஜனனியின் புதிய போட்டோஸ் வைரல்..!