நீட் தேர்வை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கையை காக்ரோச் ஜனதா கட்சியினர் வரவேற்றுள்ளனர். ஜனநாயகத்தில் மக்கள் அழுத்தம் மற்றும் போராட்டங்களின் தாக்கத்தை இந்த நிகழ்வு காட்டுவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில், “இந்தியாவில் ஜனநாயகம் உயிருடன் இருப்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் சான்றாக உள்ளன. பயப்படாமல், அரசுக்கு அடிபணியாமல் மக்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்தால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அபிஜீத் தீப்கே கோரிக்கை வைத்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நீட் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவுகள் மற்றும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், கல்வித்துறை அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் திடீர் அதிர்ச்சி... சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்!