ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த ஆறு வாரங்களாக அணில் ஒன்று மனிதர்களை ஆக்ரோஷமாகத் தாக்கி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. சாதாரணமாகச் சாதுவான விலங்காகக் கருதப்படும் அணில், இங்கு வேட்டையாடும் விலங்கைப் போல மனிதர்களைத் துரத்தித் துரத்திக் கடித்து வருகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரியும் இந்த அணில், கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் சுமார் 20 பேரை கடித்துக் குதறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் அந்தப் பல்கலைக்கழகத்தின் கல்லூரி முதல்வரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மனிதர்களைக் கண்டால் ஓடி மறையும் அணில்கள், இந்தச் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் மட்டும் மனிதர்களைக் கண்டால் ஆக்ரோஷமாகப் பாய்ந்து தாக்குவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!
கடந்த 6 வாரங்களாகத் தொடர்ந்து இந்தச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், வளாகத்திற்குள் தனியாகச் செல்லவே மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அச்சப்படுகின்றனர். அணிலின் இந்த விசித்திரமான மற்றும் ஆபத்தான நடத்தை குறித்துப் பல்கலைக்கழக நிர்வாகம் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளது.
ஆக்ரோஷமாகத் தாக்கும் அந்த அணிலை உயிருடன் பிடிப்பதற்காக வளாகத்தின் பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அணில் கடித்தவர்களுக்குத் தேவையான முதலுதவி மற்றும் ரேபிஸ் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சிறிய அணில், ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையே அச்சுறுத்தி வருவது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. அந்த அணிலுக்கு ஏதேனும் தொற்று பாதிப்பு அல்லது மூளை பாதிப்பு இருக்கலாம் எனச் சில விலங்கு ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் சோகம்: மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி..!! பதறும் குடும்பங்கள்..!!