கோவையில் அ.தி.மு.க வினர் வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுப்பொருட்கள் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், அதற்கு முன்பே மக்களுக்கு பரிசுகளை கொடுத்து ஆதரவு பெறும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
நேற்று காலை, கோவை ஓசூர் சாலையில் உள்ள இதயம் தெய்வம் மாளிகையில் அ.தி.மு.க. மகளிர் பிரிவு நிர்வாகிகள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மகளிர் பிரிவு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வார்டு வாரியாக மகளிர் தலைவர்கள் ஆட்டோக்களில் வாக்காளர்களை அழைத்து வந்தனர்.
டோக்கன் அடிப்படையில் ஹேண்ட் பேக்குகள், வாட்டர் பாட்டில்கள், ஹாட் பிளாஸ்க்கள் உள்ளிட்ட ஐந்து வகையான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. பெண்கள் மகிழ்ச்சியுடன் பரிசுகளை பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: வெள்ளிக்காசு, டிவி கிஃப்ட்.. கோவையில் கொட்டும் பரிசு மழை! களத்தில் குதித்த அரசியல் கட்சிகள்!

பரிசு பெற்ற சில மகளிர் கூறுகையில், "அ.தி.மு.க.வினர் ஆண்டுதோறும் ஜெயலலிதா அம்மாவின் பிறந்தநாளில் பரிசுகள் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் வருவதால் கூடுதலாக பரிசுகள் கொடுத்துள்ளனர். மக்களுக்கு உதவியாக இருக்கிறது" என்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு பரிசுகளை வழங்கிவிட வேண்டும் என அவசரம் அவசரமாக செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் நடப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க., திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களை கவர பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றன. பொங்கல் பரிசுகள், பரிசு ஹாம்பர்கள் போன்றவை ஏற்கனவே பல இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற பரிசு வழங்கல் நிகழ்ச்சிகள் வாக்காளர்களிடையே ஆதரவை அதிகரிக்கும் என கட்சியினர் நம்புகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையம் விதிமுறைகளை கடுமையாக கண்காணித்து வரும் நிலையில், இத்தகைய செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தலாம். கோவை போன்ற முக்கிய தொகுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு!! தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம்!! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!