கடந்த 2024ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ஏற்கனவே சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 30 பேரை குற்றப்பத்திரிகையில் சேர்த்து, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் கொலையை அரங்கேற்றியதாகவும் காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான், இந்த வழக்கில் சரியான அணுகுமுறை இல்லை என்றும், வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிஐக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐயும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம், சம்பவம் நடைபெற்ற பெரம்பூர் பகுதியில் உள்ள இடத்திற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், எஸ்பி தலைமையில் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதிகளை புகைப்படங்களாகவும் பதிவு செய்துகொண்டனர்.
இந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணையாக ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அதேபோன்று கொலை சம்பவம் நடைபெற்றபோது அதனைத் தடுக்கச் சென்ற அவரது சகோதரர் வீரமணி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு சகோதரரான கினோஸ் உள்ளிட்ட மேலும் மூன்று நபர்களிடமும் இதுவரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்தகட்டமாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 நபர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த காவல்துறை அதிகாரிகளிடமும் தகவல்களை சிபிஐ அதிகாரிகள் கேட்டு பெற்று வருகின்றனர். அவர்களிடமும் தேவையான விசாரணை நடத்தப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இதையும் படிங்க: என்ன ஆச்சு?... ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த சி.எம். விஜய்...!