கடந்த முறை தொகுதி மறுவரையறைக்கு எதிராக தேசிய அளவில் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்தது திமுகதான். தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததும் திமுகதான். இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் பாஜகவின் நெருக்கடிக்கு திமுக பணியுமா என்பது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
பாஜக திமுகவை அணுகுகிறதா? வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் திமுகவின் ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
அதேநேரத்தில், திமுக பாஜகவின் கோரிக்கையை ஏற்குமா என்பதும் முக்கியமான கேள்வியாக உள்ளது. ஏனெனில், தமிழகத்தில் திமுகவின் அரசியல் அடித்தளமே பாஜக எதிர்ப்பை மையமாகக் கொண்டதாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: உங்க சோகத்தை தான் நாங்க பாத்தோமே..!! தளபதி கச்சேரி டான்ஸ் போட்டு கிழித்த திமுக..!!
இந்த நிலைப்பாட்டை மாற்றிவிட்டு, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்பது குறித்தும் அரசியல் வட்டாரத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கி வெற்றி பெற்ற திமுகவுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்திருந்தன.
அந்தக் கட்சிகள் தற்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், "நாங்கள் ஏன் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது?" என்ற கேள்வியை திமுக எழுப்புமா என்ற விவாதமும் நடைபெறுகிறது.
அதேவேளையில், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும், அந்த அரசியல் சூழலை உருவாக்க திமுக முயற்சிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "பாஜகவை எதிர்க்கும் ஒரே காரணத்திற்காகவே திமுகவுடன் நட்புறவைத் தொடர்கிறோம். அந்த நிலை மாறினால், அந்த நட்புறவும் தொடராது" என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இது திமுகவின் முன்னாள் கூட்டணிக் கட்சிகளின் பொதுவான மனநிலையா என்பதும் தற்போது பேசப்படும் முக்கிய விஷயமாக உள்ளது.
இந்தச் சூழலில் திமுக எப்படிப்பட்ட முடிவை எடுக்கக்கூடும்? "பாஜகவுக்கு ஏன் திமுக ஆதரவு அளிக்கக் கூடாது?" என்ற கேள்வியும் திமுகவினரிடையே எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்குகிறது. அந்தக் கூட்டத்தொடரில் இரண்டு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்று தொகுதி மறுவரையறை மசோதா; மற்றொன்று மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா. இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. அதற்காக பாஜக பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடி வருவதாக கூறப்படுகிறது.
இன்றைய தி ஹிந்து நாளிதழிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும், பாஜக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "பாஜக பேசியது உண்மைதான். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மசோதாவைப் பார்த்த பிறகே முடிவு எடுப்போம்" என்று தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திமுக மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே அளித்த பேட்டியிலும், "அந்த மசோதா குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் சில அரசியல் மாற்றங்கள் நடைபெறக்கூடும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: எனக்கு ஹார்ட் அட்டாக் வரணும்னு பாஜக நினைக்குது! ஆனா அரசியல் போராட்டம் ஓயாது! ஆவேசமாக பேசிய மம்தா பானர்ஜி!