சென்னை மாநகரின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு முக்கியமான திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ரூ.20 கோடி மதிப்பீட்டில் நகரின் 300 முக்கிய சாலைகளில் சித்திரங்கள் மற்றும் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட அதிநவீன வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, விபத்துகளை தடுப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போதுள்ள பலகைகளில் எழுத்துக்கள் அதிகம் இருப்பதால் தமிழ் தெரியாதவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் சிரமப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தப் புதிய பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் முக்கிய அம்சம், எழுத்துக்களை விட படங்கள் மற்றும் சின்னங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதுதான். வாகன ஓட்டிகளுக்கு தெளிவான திசைகளை காட்டும் வகையில் பலகைகள் அமைக்கப்படும். அதே நேரத்தில், விபத்து நேரிடும் வாய்ப்புள்ள பகுதிகள், பள்ளி மண்டலங்கள், பாதசாரிகள் அதிகம் கடக்கும் இடங்கள், வேகத்தடைகள் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் எச்சரிக்கை குறியீடுகள் இடம்பெறும். உதாரணமாக, பள்ளி அருகில் குழந்தைகள் நடமாட்டம் அதிகம் என்பதை காட்டும் சித்திரங்கள், வேகத்தடை உள்ள இடங்களில் உரிய எச்சரிக்கை படங்கள் போன்றவை ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்படும்.

இதனால் மொழி தெரியாதவர்களும், வெளி மாநிலத்தவர்களும் எளிதாக சாலையை புரிந்துகொள்ள முடியும். நகரின் வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் குழப்பத்தை இந்த எளிய குறியீடுகள் குறைக்கும் என்று நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் கருதுகின்றனர்.குறிப்பாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், அண்ணா சாலை, வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் இந்த நவீன பலகைகள் முதலில் நிறுவப்பட உள்ளன.
இதையும் படிங்க: சென்னை வாக்காளர்களுக்கு நற்செய்தி! ஏப்ரல் 12 முதல் வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு!
சென்னையின் விரிவாக்கம் அடைந்த புறநகர் பகுதிகளில் சாலை கட்டமைப்பு வளர்ந்த அளவுக்கு வழிகாட்டி பலகைகள் இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்ற குறையை குடியிருப்புவாசிகள் நீண்ட காலமாக முன்வைத்து வந்தனர். இந்தத் திட்டம் அந்தப் பகுதிகளுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும்.இரவு நேர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பலகைகளில் ஒளிரும் பட்டைகள் இணைக்கப்பட உள்ளன. இதனால் இருட்டில் கூட பலகைகள் தெளிவாகத் தெரியும். தற்போதைய பலகைகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வகையில் இந்த அதிநவீன பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு... சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!