கடந்த ஜூன் 25ஆம் தேதி 20 வயது மாணவி ஒருவர், வேறு கல்வி நிறுவனத்தில் இருந்து இன்டர்னாக வந்திருந்தவர், ஐஐடி வளாகத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்த 22 வயது ரோஷன் குமார் என்பவரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார். மாலை 7:30 மணியளவில், மாணவி தனியாக நடந்து செல்லும்போது, ரோஷன் குமார் கட்டையால் மிரட்டி, அவரது முடியைப் பிடித்து இழுத்து தொந்தரவு செய்துள்ளார். மாணவி எழுப்பிய சத்தத்தால், அவர் தப்பி ஓடிவிட்டார். பாதுகாப்பு ஊழியர்கள் மூலம் புகார் பதிவு செய்யப்பட்டு, பிறகு கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் ரோஷனை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த இடதுசாரி மாணவர் அமைப்பினர் ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டன. ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளதாகவும், ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். தங்களது குற்றச்சாட்டுகளை முன்வைத்து தரையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு நிலையா? உடனே மாநில பாடத்திட்டத்தை மாற்றுங்கள்.. அன்புமணி வலியுறுத்தல்!

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, 30 வயது ஆராய்ச்சி மாணவி ஒருவர், வேளச்சேரி-தரமணி வாயில் அருகே உள்ள கேன்டீனில் தேநீர் குடிக்கச் சென்றபோது, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார். மாணவி புகார் அளித்ததை அடுத்து, கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் ஸ்ரீராமை தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 1998-ன் கீழ் கைது செய்தனர்.

இத்தகைய சம்பவங்கள் ஐஐடி வளாகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வெளியாட்களின் நுழைவை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!