தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்பேருந்துகளை இயக்க அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வியாசர்பாடியில் அமைந்துள்ள பேருந்து மின்னூட்ட நிலையத்தை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின்சார பேருந்துகளின் செயல்பாடு, சார்ஜிங் வசதிகள், எதிர்கால தேவைகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுமார் 2,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீசல் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் முக்கிய வழித்தடங்களில் புதிய ஏசி மின்பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால், பயணக் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இதனால் தினசரி பேருந்தை நம்பி பயணம் செய்யும் பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

இந்த சூழலில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம் என்றாலும், அதன் செலவை காரணம் காட்டி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று முதல்வர் தெளிவாக அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மகளிர் பயண டிக்கெட்டுகளின் பின்புறம், பேருந்துகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த தகவல்கள் தொடர்பாக தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. புதிய மின்பேருந்துகள் இயக்கம், கட்டண நிலை மற்றும் வருவாய் திட்டங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்து துறை வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய உயர்நிலை சாலை திட்டம் ரத்து? அமைச்சரவையில் முக்கிய முடிவு!