தே.மு.தி.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் ஆறு பேர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் தானே நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் ஒருபோதும் ஜாதியை வெளிப்படுத்தியதில்லை. தன்னை தமிழர் என்றே அடையாளப்படுத்திக் கொண்டு, அனைத்து சமூக மக்களுக்கும் உதவிகள் செய்தார். தமிழ் தவிர வேறு மொழிப் படங்களில் நடிக்க மறுத்த அவர், முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கட்சியில் இணைத்து பணியாற்ற வைத்தார்.
ஆனால் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரேமலதா மற்றும் சகோதரர் சுதீஷ் ஜாதி ரீதியான அரசியலை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் நாயுடு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் போட்டியிட்டார். தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா இடத்தை பிரேமலதா தன் சகோதரர் சுதீஷுக்கு வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: வெறுமனே அறிவிப்பு மட்டும் போதுமா? தேர்தல் அறிக்கை எங்கே?! விஜய் செயலால் தவெக நிர்வாகிகள் அப்செட்!
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பிரேமலதா நேற்று வெளியிட்டார். அதில் விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய் பிரபாகரன் உட்பட ஆறு வேட்பாளர்கள் நாயுடு சமூகத்தினராக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. அமைச்சர்களான வேலு மற்றும் சேகர்பாபு ஆகியோர் மூலம் கூட்டணிக்குள் நுழைந்து அதிக தொகுதிகளைப் பெற்ற பிரேமலதா, இப்போது தன் கட்சியின் 10 தொகுதிகளில் 60 சதவீதத்தை நாயுடு சமூகத்தினருக்கு ஒதுக்கியிருப்பது தே.மு.தி.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தின் காலத்தில் ஜாதி அரசியல் இல்லாத கட்சியாக தே.மு.தி.க. விளங்கிய நிலையில், இப்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர் விஜயகாந்தின் தமிழர் அடையாளத்தை நினைவுகூர்ந்து, தற்போதைய ஜாதி அடிப்படையிலான வேட்பாளர் தேர்வை விமர்சித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை தே.மு.தி.க.வின் உள் அமைப்பில் புதிய பிரச்னைகளை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும், தே.மு.தி.க.வுக்குள் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி அடுத்த சில நாட்களில் மேலும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷா கோரிக்கைகளை நிராகரித்த பழனிசாமி!! பாஜக கேட்ட தொகுதிகள் கைவிரிப்பு!