காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குருவை பருவம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமான ஜூன் 12 ஆம் தேதி நீர் திறப்பு நடைபெறாமல் போனது. இதனால் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் வழியாக பாசனம் பெறும் பெரும்பாலான விவசாயிகள் குருவை நெல் சாகுபடியை முழுமையாக கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆறு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது கணிசமாகக் குறைந்துள்ளது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி சுமார் மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் ஏக்கர் வரை மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிலும் பெரும்பாலானவை ஆழ்துளை கிணறுகள் உள்ள பகுதிகளில் மட்டுமே சாத்தியமானது.ஆழ்துளை கிணறுகளை நம்பி சாகுபடி செய்த விவசாயிகளும் இப்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் மோட்டார்கள் பழுதடைகின்றன. சில இடங்களில் உப்புத்தன்மை கொண்ட நீர் வருகிறது.

மின்சார விநியோகத்திலும் அடிக்கடி தடங்கல்கள் ஏற்படுவதால் பயிர்களுக்குத் தேவையான நீர் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால் இளம் பருவத்தில் உள்ள குருவை நெற்பயிர்கள் வாடி கருகத் தொடங்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போயுள்ளன. திருத்துறைப்பூண்டி பகுதிகளிலும் வயல்வெளிகள் பாளம் பாளமாக வெடித்து காட்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் பச்சைப் பசேலென இருந்த நிலங்கள் இப்போது வறண்டு கிடக்கின்றன.
இதையும் படிங்க: CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!
இந்த நிலையில் பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குருவைப் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை உடனடியாக நேரில் அனுப்பி கருகிய பயிர்களை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கியத்துவம்..! துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கிய EPS..!!