தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இன்று தஞ்சாவூரில் ஒரே மேடையில் தோன்றி வாக்கு சேகரித்தனர். பிரிந்து கிடந்த இரு துருவங்கள் 'மக்கள் விரோத ஆட்சியை' அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் கைகோர்த்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் 'அதிர்வை' ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரத்தின் போது தொண்டர்களின் உற்சாக வரவேற்பிற்கு மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த இணைப்பை "இயற்கையான கூட்டணி" என்று வர்ணித்தார். அதிமுகவின் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவும், தற்போதைய ஆட்சியின் அவலங்களை முடிவுக்குக் கொண்டு வரவும் ஒத்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
மேலும், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், திமுகவின் போக்கை கடுமையாக விமர்சித்தார். "அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், புதிய ரயில் பாதைகள் எனப் பல திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால் இப்போது திமுக எப்போது பார்த்தாலும் பாஜகவை விமர்சித்துக் கொண்டே இருந்தால் எப்படி நிதி கிடைக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
தேர்தல் வரை கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் மக்களுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதுதான் ஒரு பொறுப்பான கட்சியின் கடமை என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு இருந்தால்தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈபிஎஸ் - டிடிவி இணைந்து பிரச்சாரம் செய்திருப்பது டெல்டா மாவட்ட அரசியலில் அதிமுக கூட்டணிக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: கடும் வார்த்தை போர்..!! ஒரே ஃபிளைட்டில் பறக்கும் உதயநிதி - இபிஎஸ்..!! பின்னணி என்ன..??